உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்: வெளிநாட்டினர் புகழாரம்!

நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல்: வெளிநாட்டினர் புகழாரம்!

சிவகங்கை: சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் நகரத்தாரின் பாரம்பரிய செவ்வாய் பொங்கல் விழா நடந்தது.தை பொங்கலை அடுத்து வரும் செவ்வாய் அன்று, நகரத்தார் சமூகத்தினர் செவ்வாய் பொங்கல் விழா நடத்துவர். ஒரு குடும்பத்தை ஒரு புள்ளியாக கணக்கிட்டு வரி வசூல் செய்வர். தங்கள் பிள்ளைகளுக்கு மாப்பிள்ளை, பெண் தேடுவது இவ்விழாவின் சிறப்பு.முதல் மரியாதை: நேற்று முன்தினம் கோயில் சன்னதியில் குடும்ப தலைவர்கள் பெயரை சீட்டில் எழுதி பானையில் போட்டு குலுக்கி எடுத்தனர். இதில் சிங்கப்பூர் லட்சுமணன் செட்டியார் பெயர் வந்தது. இவர்களுக்கு கோயில் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் மண்பானையில் முதலில் பொங்கல் வைத்தனர். இதில், நகரத்தார் அனைவரும் பால் ஊற்றி துவக்கி வைத்தனர். மொத்தம் 900 குடும்பத்தினர் வெண் பொங்கல் மட்டுமே வைத்தனர். கண்ணுடைய நாயகிக்கு கிடாவெட்டி சிறப்பு அபிஷேகம் செய்தனர்.நகரத்தார் பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் நேற்று குடும்பத்துடன் வந்திருந்தனர். கோயில் தக்கார் லட்சுமணன் செட்டியார், கண்காணிப்பாளர் கணபதிராமன் ஏற்பாடுகளை செய்தனர். பாகனேரி புல்வநாயகி அம்மன் சன்னதி முன்பாகவும், நகரத்தார் சார்பில் செவ்வாய் பொங்கல் விழா நடந்தது.

வெளிநாட்டினர் புகழாரம்:
பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மன், ஆஸ்திரேலியாவில் இருந்து சுற்றுலா பயணிகள் இவ்விழாவுக்கு வந்தனர்.இத்தாலி மாணவர் லியோ கூறுகையில், “அனைவரும் ஒன்று கூடி விழா நடத்துவதை நான் பார்த்தது இல்லை. இதை ஆச்சரியமாக பார்க்கிறேன். இவ்விழாவில் மாப்பிள்ளை, பெண் தேடும் தமிழ் கலாசாரம் பாராட்டுக்குரியது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !