உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை

காளியம்மன் கோவில் திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் தடை

சேலம்: சேலம் திருமலைகிரி அருகே, காளியம்மன் கோவிலில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம், திருமலைகிரியை அடுத்த வேடுகாத்தாம்பட்டியில், ஓம் காளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், இங்கு திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. சைலகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பிரச்னையால், அந்த ஊரிலும், 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும், 22ம் தேதி அதிகாலை, 3 மணிக்கு பூச்சாட்டுதலும், பிப்ரவரி, 3,4,5 தேதிகளில் திருவிழா நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வருவாய்த்துறை, போலீஸ் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டது. தர்மகர்த்தா பழனிசாமி, ஊர்கவுண்டர் பச்சியண்ணன், கோவில் பூசாரி கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. 144 தடை இருப்பதால் கோவில் திருவிழா நடத்துவதற்கு அனுமதியில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர். அதை ஏற்றுக்கொண்ட கோவில் விழா கமிட்டியினரும், தடை உத்தரவு நீங்கும் வரை, திருவிழா நடத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்தனர். அதேபோல், திருமலைகிரியில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவும், அடுத்த மாதம் நடக்க இருந்தது. நேற்று பூச்சாட்டுதலுடன் துவங்க இருந்த நிலையில், 144 தடை உத்தரவை காரணம் காட்டி, போலீஸ் துணை கமிஷனர் செல்வராஜ் விழா குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவர்களும் விழாவை பின்னர் நடத்தி கொள்வதாக வாக்குறுதி அளித்தனர். இதனால், திருமலைகிரி பகுதியில் தேவையில்லாத அசம்பாவிதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !