திருப்புவனத்தில் கழிவுகளால் வைகை நடவடிக்கை எடுக்காத பேரூராட்சி நிர்வாகம்
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் கொட்டப்படும் குப்பை, கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பதோடு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வரும் பக்தர்களும் முகம் சுளிக்கின்றனர்.
மதுரையை கடந்து திருப்புவனம் வழியாக செல்லும் வைகையில் மறைந்த முன்னோர்களுக்கு திதி,தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும் என்றும், தங்கள் சந்ததியினருக்கு ஆசி வழங்குவார்கள், காசியை விட வீசம் (பழங்கால அளவு முறை) பெரியது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை. சிவகங்கை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். தை அமாவாசை, மகாளய அமாவாசை, ஆடி அமாவாசை போன்றவிசேஷதினங்களில் அதிகமானோர் வருகை தருகின்றனர். முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் பூஜை பொருட்களான தேங்காய், வாழைப்பழம், விபூதி, குங்குமம், அஸ்தி, பிளாஸ்டிக் பை போன்றவற்றை வைகை ஆற்றிலேயே கரைப்பது வழக்கம், வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும் போது பொருட்களை அடித்து சென்று விடும்.
ஆனால் தற்போது சிறிதளவே தண்ணீர் செல்வதாலும், ஒரு சில இடங்களில் தண்ணீர் பள்ளத்தில் தேங்கி பாசி படர்ந்து இருப்பதாலும் பூஜை பொருட்களும் தேங்கி விடுகிறது. நாளடைவில் துர்நாற்றம் வீசி சுகாதாரக்கேடு நிலவுகிறது. வைகை ஆற்றை சுத்தம் செய்வது பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தான். திதி பொட்டலில் பக்தர்களிடம் கட்டணமான தர்ப்பணத்திற்கு 20 ரூபாயும், திதிக்கு 40 ரூபாயும் தேவஸ்தானத்தால் நியமிக்கப்பட்ட குத்தகைதாரர் வசூலித்து வருகிறார். ஆற்றை சுத்தம் செய்வதில் பொதுப்பணித்துறையும் பேரூராட்சி நிர்வாகமும் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,"" வைகை ஆற்றை ஒரு கி.மீ., தூரம் சுத்தம் செய்ய ஒரு லட்ச ரூபாய் செலவாகும். திதி பொட்டல் பகுதியை சுத்தம் செய்ய குறைந்த பட்சம் 5 லட்ச ரூபாய் வரை செலவாகும். மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கினால் சுத்தம் செய்ய முடியும், என்றனர். பேரூராட்சி நிர்வாகத்தரப்பில் கூறுகையில்,"" திதி பொட்டல் வசூல் பணம் முழுவதும் தேவஸ்தானத்திற்கு செல்கிறது. அப்படி இருந்தும் பக்தர்களின் வசதியை முன் னிட்டு குடிநீர் வசதி,கழிப்பிட வசதி செய்து தந்துள்ளோம். ஆற்றை சுத்தம் செய்ய எங்களிடம் போதியநிதி இல்லை, என்றனர்.