மதுரை சித்திரை திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினார் கள்ளழகர்!
அழகர்கோவில்: மதுரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்புகிறார்.அழகர்கோவில் சித்திரை திருவிழா ஏப்., 18ல் துவங்கியது. முதல் 2 நாட்களும் பல்லக்கில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்தார். முக்கிய விழாவான வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக ஏப்., 20ல் கள்ளழகர் திருக்கோலத்தில் மலையில் இருந்து புறப்பட்டார். ஏப்., 22ல் வைகை ஆற்றில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம், தசாவதாரம் அலங்காரங்களில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணிக்கு தல்லாகுளத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளிய கள்ளழகர், அங்கிருந்து புறப்பட்டு புதுார் வழியாக மலைக்கு திரும்பினார். இரவு 9 மணிக்கு சுந்தரராஜன்பட்டியில் திருமஞ்சனம் நடந்தது. இரவு 11 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட அவர் இன்று காலை அழகர் மலையை அடைகிறார்.