சரநாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேக பூர்த்தி!
ADDED :3453 days ago
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், மண்டலாபிஷேக பூர்த்தி விழா இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 108 மூலிகைகளால் சிறப்பு ஹோமமும், மாலையில், லட்சார்ச்சனையும் நடந்தது. இன்று (5ம் தேதி) காலை, மூலவர் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஹோமம், மகா பூர்ணாஹூதி, மாலை 4:30 மணிக்கு, உற்சவர் சரநாராயண பெருமாள் உபய நாச்சியார்களுடன் தங்க வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. நாளை (6ம் தேதி), அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பெருமாள் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 9:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.