பாடலீஸ்வரர் கோவில் வைகாசி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 3ம் தேதி வண்ணார மாரியம்மன் உற்சவமும், 5ம் தேதி இரவு எல்லை கட்டு உற்சவமும், 6ம் தேதி பிடாரி அம்மனுக்கு காப்பு கட்டும் உற்சவமும் நடந்தது. நேற்று காலை 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சோமாச கந்தர், பஞ்சமூர்த்திகள் யாத்ராதானம் செய்து புறப்பாடாகி ஊஞ்சல் சேவை நடந்தது. தொடர்ந்து, கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர். வரும் 16ம் தேதி இரவு தெருவடைச்சானிலும், 17ம் தேதி இரவு வெள்ளி ரதத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. மறுநாள் 19ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவமும், 20ம் தேதி காலை 7:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் உற்சவமும் நடக்கிறது. 21ம் தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு முத்துப்பல்லக்கிலும், 22ம் தேதி தெப்பல் உற்சவமும், 23ம் தேதி திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்ட ஐதீக உற்சவமும், இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடக்கிறது.