கில்லா வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், ஷராப் பஜார் பகுதியில், பெருந்தேவி தாயார் சமேத கில்லா வரதராஜபெருமாள் கோவில், 91ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை, சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும் செய்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து காலை, 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் அன்னவாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம், சூரியபிரபை வாகனம் உள்ளிட்ட, பல வாகனங்களில் மேளதாள இசையுடன் திருவீதி உலா நடக்கிறது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட சேவை உற்வசம், வரும்,10ம் தேதியும், 12ம் தேதி தேர்த்திருவிழாவும் நடக்கிறது. 15ஆம் தேதியுடன் பிரம்மோற்சவம் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்துள்ளனர்.