ரமலான் சிந்தனைகள்- 4: உழைப்பே உயர்வு தரும்
ஒருசமயம், நபிகளாரிடம் வந்த ஒருவர், தனக்கு உதவுமாறு கேட்டார். அவரிடம், “உம்மிடம் உடமைகள் ஏதாவது உள்ளதா?” என்று நாயகம் கேட்டார். “என்னிடம் தண்ணீர் கிண்ணம் ஒன்றும், படுக்கை விரிப்பும் தான் உள்ளன.வேறு எதுவுமில்லை,” என்று அவர் பதிலளித்தார். அவை இரண்டையும் கொண்டுவர அவர் உத்தரவு விட்டார். “இவற்றை வாங்க யாராவது தயாராக இருக்கிறீர்களா? என்று தன் தோழர்களிடம் கேட்டார். அதை ஒருவர் இரண்டு திர்ஹம் கொடுத்து வாங்கிக் கொண்டார். பின் உதவி கேட்டு வந்தவரிடம் அதைக் கொடுத்து, இதில் ஒரு திர்ஹமுக்கு உமக்கு உணவு வாங்கிக்கொள்ளும். இன்னொரு திர்ஹமுக்கு ஒரு துண்டுக்கயிறு வாங்கிக்கொள்ளும். காட்டுக்குச் சென்று விறகு சேகரித்து வந்து கடைத்தெருவில் விற்பனை செய்யும், என்று கூறி அனுப்பினார்.15 நாட்களுக்குப் பிறகு, அந்த மனிதர் நாயகம் முன் வந்தார். அவர் சொன்னபடி செய்ததாகவும், தற்போது தம்மிடம் 15 திர்ஹம் மீதம் உள்ளதாகவும், அதைக்கொண்டு தேவையான கோதுமை, துணிமணி வாங்கப்போவதாகவும் தெரிவித்தார். நாயகம்(ஸல்) அவரிடம், “எது மிகவும் போற்றத்தக்கதும், அறிவுடைமையும் ஆகும்? இதுவா, யாசகம் கேட்ட முத்திரையுடன் மறுமைநாள் சென்றடைவதா?” என்று கேட்டார். உழைப்பே உயர்வு
என்பது இன்றைய சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.44 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.15 மணி