பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோவிலில் தோட்டம் உற்சவம்!
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோவிலில் தோட்டம் உற்சவத்தை முன்னிட்டு வரதராஜப் பெருமாள், ரங்கநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பண்ருட்டி ஸ்ரீபெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோவிலில் நேற்று தோட்டம் உற்சவத்தை முன்னிட்டு, காலை 5:00 மணிக்கு திருவதிகை ரங்கநாயகி சமேத ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக வருகை புரியும் வைபவம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக உற்சவர் வரதராஜ பெருமாளுக்கும், ரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு மகா திருமஞ்சனம், காலை 11:30 தீபாராதனை மணிக்கு நடந்தது. மாலை 5:00 மணிக்கு இரு பெருமாளும் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக புண்ணியகோடி விமானத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை 6:00 உற்சவர் பெருமாள் மாடவீதி புறப்பாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் பாண்டுரங்கன் செய்தார்.