உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலையில் பக்தர் கூட்டம்

திருமலையில் பக்தர் கூட்டம்

நகரி :திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வைகுண்டம் கியூ காம்ப்ளக்சின் இரண்டாவது வளாகங்கள் அனைத்திலும் பக்தர் கூட்டம் நிரம்பிய நிலையில், கோவிலுக்கு வெளியிலும் நீண்ட வரிசையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஞாயிறன்று மாலை நிலவரப்படி, இலவச தரிசனத்திற்கு 8 மணி நேரம், 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு 3 மணி நேரமும் காத்திருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.திருமலையில் இன்று (திங்கள்) பிற்பகல் வரை பக்தர் கூட்டம் நீடிக்குமென, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பதிக்கு நகை காணிக்கை தருவதற்கு கட்டுப்பாடு வரும்

கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள், திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கிய, 30 கிலோ எடையுள்ள தங்க கிரீடத்தின் உண்மையான மதிப்பு குறித்து எந்தவித தகவலும் இல்லை.கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினாலும், தங்க ஆபரணங்களுக்கான பில்லை கொடுக்காத பக்தர்களிடமிருந்து, தேவஸ்தானம் ஆபரணங்களை பெற்றுக் கொள்வது எந்தவிதத்தில் நியாயம்? என, தேவஸ்தான போர்டின் அறங்காவலர் குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ., வுமான சூர்யபிரகாஷ் ராவ், கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, செப்., 12ம் தேதி (இன்று) நடக்க உள்ள தேவஸ்தான போர்டின் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என, அவர் கூறினார்.

ஐதராபாத் சட்டசபை வளாகத்தில், நிருபர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல், ஆபரணங்களை தயார் செய்து கொடுப்பது, இதற்கு தேவஸ்தானத்தை சேர்ந்த சில அதிகாரிகள் இடைத்தரகர்களாக செயல்படுவது போன்ற காரணத்தால், ஆபரணங்களை பெற்றுக்கொள்ள தடை விதிக்க வேண்டுமென்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பக்தர்கள் யாரேனும் தங்களின் பிரார்த்தனையாக ஆபரணங்களை காணிக்கையாக வழங்க முன்வந்தால், அவற்றை திருமலை கோவில் உண்டியலில் மட்டுமே செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையை அதிகாரப்பூர்வமாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திருமலைக்கு வரும் பக்தர்களில், தற்போது 36 ஆயிரம் பேருக்கு மட்டும் தங்கும் விடுதி வசதி உள்ளது. இதை 50 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருமலையில் தங்கும் வசதி, சாமி தரிசனம், இலவச அன்னதானம் போன்ற வசதிகள் குறித்து பக்தர்களிடம் அதிருப்தி உள்ளது. இதுகுறித்தும் பரிசீலிக்கப்படும்.திருமலை புண்ணிய ÷க்ஷத்திரத்தை, ஆன்மிக நகரமாக மாற்றி அமைக்கவும், கோவிலில் சுவாமி சன்னிதியில் ஆன்மிக மணம் கமழும் சூழ்நிலை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படும். கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வழங்கிய தங்க கிரீடம், வருமான வரி சட்ட வரம்புக்குள் வராவிட்டால், கிரீட விஷயம் குறித்து, போர்டின் ஆலோசனை கூட்டத்தில் விவாதித்த பின், மாநில அரசிடம் ஒப்படைப்பது குறித்து முடிவு செய்யப்படும் .இவ்வாறு சூர்யபிரகாஷ் ராவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !