ஒரே நாளில் 500 திருமணம் ஸ்தம்பித்தது பழநி!
ADDED :3493 days ago
பழநி: விடுமுறை, முகூர்த்த தினத்தை முன்னிட்டு பழநியில் ஒரே நாளில் நடந்த, 500க்கு மேற்பட்ட திருமணங்களால் நகரம் ஸ்தம்பித்தது. நேற்று முன்தினம் இரண்டாவது சனிக்கிழமை, விடுமுறை. நேற்று ஆனி மாத கடைசி ஞாயிறு, சுபமுகூர்த்த தினம். இதனால், கூட்டத்தில் சிக்கி பழநி திணறியது. நேற்று மட்டும் திருஆவினன்குடிகோவில், மடம், மண்டபங்களில், 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. கோவிலுக்கு செல்லும் பூங்கா ரோடு, அடிவாரம் அய்யம்புள்ளி ரோடு, குளத்து ரோடு, திருஆவினன்குடி பகுதிகளில் வாகனங்களை ரோட்டின் இருபுறமும் நிறுத்தினர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதிய போலீசார் இல்லாததால், நெரிசல் அதிகரித்தது. பக்தர்கள் பொது தரிசன வழியில், 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.