உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோவில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 19 காலை 8.15 மணிக்கு நடக்கிறது. இக்கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஆடித் தேரோட்ட விழா நேற்று காலை துவங்கியது. அதிகாலையில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் கொடிமரம் எதிரில் உள்ள மைய மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். காலை 9:15 மணிக்கு அனுமார் உருவம் கொண்ட கொடி பல்லக்கில் எடுத்து வரப்பட்டு, காலை 9:45 மணிக்கு கொடியேற்றப்பட்டது. இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.

இன்று முதல் காலை தங்கப் பல்லக்கிலும், இரவில் பல்வேறு வாகனங்களிலும் சுவாமி எழுந்தருளி கோயிலை வலம் வருகிறார். ஜூலை 15ல் சுந்தரராஜன்பட்டி வரும் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடக்கிறது. ஜூலை 16ல் மோகினி அவதாரத்திலும், 17ல் பூச் சப்பரத்திலும் எழுந்தருளுகிறார். முக்கிய விழாவான தேரோட்டம் ஜூலை 19ல் காலை 8:15 மணிக்கு மேல் 9:00 மணிக்குள் நடக்கிறது. அன்று இரவு பூப்பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வருகிறார்.  ஜூலை 20ல் திருவிழா சாற்று முறையும், மறுநாள் உற்சவ சாந்தியும் நடக்கிறது. ஆக., 2ல் ஆடிப்பெருக்கு விழா நடக்கிறது. அன்று ஆடி அமாவாசை என்பதால் 18ம் படி கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு கருட வாகனத்தில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோட்டை வாசல் வரை வலம் வருகிறார். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லத்துரை தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !