திருத்தணி பச்சையம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா
திருத்தணி: பச்சையம்மன் கோவிலில், நேற்று நடந்த தீ மிதி திருவிழாவில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி அடுத்த, முருக்கம்பட்டு கிராமத்தில் உள்ள மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில், 3ம் ஆண்டு தீ மிதி விழா, கடந்த, 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளும், இரவில் மகாபாரத நாடகங்களும் நடந்தன. நேற்று முன்தினம், பக்தர்கள் காப்பு கட்டி, அலகு குத்தி, அம்மன் ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, அம்மனுக்கு பூஜைகள், காலை, 11:00 மணிக்கு சீர்வரிசை, அக்னி குண்டத்தில் அக்னி வளர்த்தல் நிகழ்ச்சி நடந்தது.தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், டிராக்டரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.