சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு யாகம்
ADDED :3334 days ago
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று நடந்த சிறப்பு யாகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று, கார்த்திகை மாதம் முதல் நாளையொட்டி, சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதற்காக கோவில் வளாகத்தில், யாகசாலையில், ஐந்து கலசங்கள் வைத்து, அதிகாலை, 5:00 மணிக்கு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, மூலவர் விநாயகருக்கு, பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை தரிசித்தனர்.