திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :3274 days ago
திருவண்ணாமலை: சிவராத்திரி தேய்பிறையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கேஸ்வரரரை, மாலை, 6:00 மணி முதல், 7:00 மணி வரை, சூட்சும முறையில் குபேரன் பூஜை செய்து வழிபட்டு, கிரிவலம் செல்வதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் பக்தர்கள், குபேர லிங்கேஸ்வரரை வழிபட்டு, கிரிவலம் சென்று, ஓராண்டு மது, மாமிசம் உண்ணாமல் இருந்தால், வாழ்க்கையில் பல மடங்கு உயரலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் நேற்று மாலை கிரிவலப்பாதையில் உள்ள குபேர லிங்கேஸ்வரரை, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், 14 கி.மீ., தூரம் நடந்து கிரிவலம் சென்றனர். குபேரன் கிரிவலம் செல்கிறார் என்பதற்காக, கிரிவலப்பாதை முழுவதும் பச்சரிசி மாவில் நெய் தீபம் ஏற்றி, வெற்றிலையின் மேல் வைத்து, பெண்கள் வழிபாடு செய்தனர்.