அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலில் நிகும்பலா யாகம்: பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவி கோயில் உள்ளது.எட்டு திசையும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலில் 5 வகையான இலைகளை கொண்ட தலவிருட்சம் உள்ளது. ராவணன் மகன் மேகநாதன், பஞ்ச பாண்டவர்கள் இத்தலத்தில் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றுள்ளனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப்பெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம் பாளை சரணடைந்து,பிரார்த்தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். கார்த்திகை மாத அம்மாவாசையான நேற்று காலை கோயில் மண்டபத்தில் அ ம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன.மதியம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத, தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல்,பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து ஸ்ரீ மகா பிரத்தியங்கிரா தேவிக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் திரைப்பட இசைய மைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். டிசம்பர் மாதம் 28ம் நிகும்பலா யாகம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.