அரோகரா கோஷம் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்!
திருவண்ணாமலை: பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது.
அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து அருள்பாலித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், சமேத வள்ளி தெய்வானை முருகர், சமேத உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
அதிகாலை காலை 4மணி அளவில் அண்ணாமலையார் மூல கருவறையில் கற்பூர தீபமேற்றி, முரளி குருக்கள் தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேத மந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் சுவாமி மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் அதிகாலை 4:00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதனை கோவில் குருக்கள் டி.எஸ். குமார் கையில் ஏந்தியவாறு கோவில் பிரகாரம் முழுவதும் சென்று, இந்த சிவ-சக்தி மூர்த்தங்களிலிருந்து விரிவானதே எல்லா மூர்த்திகளும் என்பதனை விளக்கும் வகையில், அம்மன் கோவில் கருவறையில் தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் விநாயகர் சந்நதி உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தபின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப் போது சரியாக 5.59 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர்.பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668 அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது.