கை மண் மலையானது: ஒரு விநோத திருவிழா
மேலுார்: மேலுார் நரசிங்கம்பட்டியில் திருக்கார்த்திகையை முன்னிட்டு, மண் அள்ளி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் மண் பிடித்திருவிழா கொண்டாடப்பட்டது. பெருமாள் மலை அடிவாரக் கோயிலில், கார்த்திகை மாதம் திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்பிடித் திருவிழா நடக்கிறது. கோயில் முன்புள்ள ஓடையில் நரசிங்கம்பட்டி, தெற்குத்தெரு, வெள்ளரிப்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமத்தை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் புனித நீராடினர். பின்னர் அங்கிருந்து ஒரு பிடி மணலை எடுத்து வந்து கோயில் முன் குவித்து வழிபாடு நடத்தினர். இவ்வாறு ஆண்டுதோறும் பக்தர்கள் குவித்த மணல் இன்று மலை போல் குவிந்துள்ளது. இம்மலையை சுற்றி வந்த பக்தர்கள் உப்பு, சர்க்கரை, மிளகு போன்றவற்றை நேர்த்திக்கடனாக செலுத்தினர். இதனால் மழை பெய்து விவசாயம் செழித்து நோய் நொடி இல்லாமல் வாழ்வதாக பக்தர்கள் கூறினர். குழந்தையை கரும்பு தொட்டிலில் கட்டி சுமந்துவந்து முடிகாணிக்கை செலுத்தினர். இதே போல் மேலவளவு கருப்பு கோயிலில் பக்தர்கள் விளக்கு ஏற்றியும், பொங்கல் வைத்தும் கொண்டாடினர்.