கோயில் சொத்துக்களை பாதுகாக்க சிவனடியார் விழிப்புணர்வு ஊர்வலம்
ராமேஸ்வரம்: தமிழக இந்து கோயில் சொத்துக்களை பாதுகாக்க கோரி, ராமேஸ்வரத்தில் 600 சிவனடியார்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். தனி நபர் ஆக்கிரமித்துள்ள இந்து கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும். கோயில் சிலைகளை பாதுகாக்க வேண்டும். பொதுமக்கள் தாமாக முன்வந்து கோயில்களை பராமரித்து புனிதம் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தினர் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் உழவாரப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நேற்று ராமேஸ்வரத்தில், இறைபணி மன்ற ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் 600 சிவனடியார்கள் திட்டகுடி, கோயில் ரதவீதியில் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். இவர்களை, ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் வரவேற்றார். இக்குழுவினர் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நந்தவனம், கோயில் பிரகாரங்கள், அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்தனர்.