வீரபத்ரகாளியம்மன் கோவில் குண்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருப்பூர்: திருப்பூர், ராமையா காலனி கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள், குண்டம் இறங்கி வேண்டுதல் நிறைவேற்றினர்.பி.என்., ரோடு, மேட்டுப்பாளையம் ராமையா காலனி, கொண்டத்து வீரபத்ரகாளியம்மன் கோவிலின், 30வது ஆண்டு குண்டம் திருவிழா, கடந்த, 19ல், கணபதி ஹோமத்துடன் துவங்கியது; கொடியேற்றி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து தினமும், அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நேற்று முன்தினம்மாலை, குண்டம் ஏற்றும் நிகழ்ச்சியும்; நேற்று காலை, பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அம்மனுக்கு, புடவை மாலை, சிம்ம வாகனத்துக்கு கனி மாலையும் அணிவித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது.குண்டம் இறங்கும் நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று, தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். ஆண்கள், கைக்குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், திருநங்கையர் என ஏராளமானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.பிற்பகல், பொங்கல் வைப்பு நிகழ்ச்சியும், சிறுவர்கள் பங்கேற்ற நடன மற்றும் இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. குண்டம் விழாவில், இன்றும், நாளையும் அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகள் நடக்கிறது.