காரமடை அரங்கநாதர் கோவிலில் ஜன.8 சொர்க்கவாசல் திறப்பு
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, ஜன. 8ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.
காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த, 29ல் பகல் பத்து உற்சவம் துவங்கியது. தினமும் அரங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலின் உள்ளே வலம் வந்து ரங்க மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார். அவர் முன்பு கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி, வேதவியாச ஸ்ரீதர் பட்டர் ஆகியோர் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாசுரங்களை சேவித்து வருகின்றனர். ஜன.7 இரவு பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் மோகினி அவதாரத்தில் எழுந்தருள உள்ளார். நாளை, 8ம் தேதி காலை 5:45 மணிக்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு, 10:30 மணிக்கு திருவாய் மொழித்திருநாள் என்னும் ராப்பத்து உற்சவம் தொடங்குகிறது. 15ம் தேதி திருமங்கை மன்னன் வேடுபரி குதிரை வாகனத்தில் எழுந்தருளும், நிகழ்வும் 17ம் தேதி சாற்றுமுறை உற்சவமும் பூர்த்தி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.