கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மோட்ச வைபவம்
ADDED :3383 days ago
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், நம்மாழ்வார் மோட்ச வைபவம் நடந்தது. மார்கழி மாதத்தையொட்டி, பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி உற்சவ சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் முதல் நடந்து வருகின்றன. தசமி, ஏகாதசி, துவாதசி ஆகிய நாட்களில், முத்தங்கி சேவையில் மூலவப்பெருமாள் காட்சியளித்தார். இதனைத்தொடர்ந்து, தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, நேற்றுமுன்தினம் நம்மாழ்வார் மோட்ச வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் கோவிலைச்சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும்; ஆழ்வார்கள் பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, ஆழ்வாருக்கு மோட்ச வைபவம் நடந்தது.