அகத்தீஸ்வரருக்கு இளநீர் அபிஷேகம்
ஆர்.கே.பேட்டை: தைப்பூசம் திருவிழாவையொட்டி, நாராயணவனம் அகத்தீஸ்வர சுவாமிக்கு, நாளை 108 இளநீர் அபிஷேகம் நடக்கிறது. நகரி அடுத்த, நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ள, மரகதவள்ளி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில், நாளை, மாலை 3:00 மணிக்கு, 108 இளநீர் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து மலர் அலங்காரத்தில், சுவாமியும் அம்பாளும் அருள்பாலிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதேபோல், பொதட்டூர்பேட்டை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நாளை, தைப்பூசம் திருவிழா கொண்டாடப்படுகிறது. காலை 9:00 மணிக்கு, லட்சிகான் குளக்கரையில் இருந்து, 108 பால்குடங்களை, பக்தர்கள் ஊர்வலமாக சுமந்து வருகின்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக வரும் ஊர்வலம், 11:00 மணிக்கு, கோவில் வளாகத்தை வந்தடையும். பின், மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெறும். மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமான், மலர் அலங்காரத்தில் வீதியுலா எழுந்தருளுகிறார்.