சின்னம்மையார் இல்லத்தில் நாளை தைப்பூச விழா
பொன்னேரி: வள்ளலார் தாயார் சின்னம்மையார் இல்லத்தில், நாளை (9ம் தேதி) தைப்பூச விழா நடைபெறுகிறது. திருவருட்பிரகாச வள்ளலாரின் தாயார் சின்னம்மையார், பொன்னேரி அடுத்த, சின்ன காவணத்தில் பிறந்தார். சிறுவயதில், வள்ளலாரும் சின்னகாவணம் கிராமத்தில், தன் தாயாருடன் சிறிது காலம் வசித்துள்ளார். சின்னம்மையார் நினைவாக, சின்னகாவணம் கிராமத்தில், சத்திய தரும சாலை, ஞானசபையுடன் நினைவு இல்லம் அமைக்கப்பட்டது. இங்கு தினமும், ஏழை எளியோருக்கு காலையில் கஞ்சி வார்த்தலும், பகலில் உணவும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு, நாளை, தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. காலை, 5:30 மணிக்கு அருள்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், காலை, 8:00 மணிக்கு, சன்மார்க்க கொடி உயர்த்துதல், காலை, 8:30 மணிக்கு கஞ்சி வார்த்தல், பகல், 12:30 மணிக்கு பசியாற்றுவித்தல் என, நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை, வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை நிர்வாகம் செய்து வருகின்றனர்.