வடிவீஸ்வரம் அழகம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம்
நாகர்கோவில்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் மாசி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில். இக்கோயில் முக்கிய விழாவான மாசி திருவிழா நேற்று காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. மணி நம்பியார் கொடிமரத்தில் கொடியேற்றினார். விழா நாட்களில் காலை, மாலையில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவாரி மூர்த்திகளின் வாகன பவனி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான பத்தாம் தேதி காலை 9.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. 11-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வருதல் நடக்கிறது. விழா நாட்களிலும் மாலை 6.30 முதல் இரவு 10 மணி வரை கோயில் எதிரே அமைந்துள்ள தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் கலையரங்கில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.ஏற்பாடுகள் தேவம்போர்டு இணை ஆணையர் பாரதி மேற்பார்வையில், அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் பக்த சேவா சங்கம் செய்துள்ளது.