சுந்தர விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: சுந்தர விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, மூலவருக்கு சிறப்பு பூஜை மற்றும் உட்புறப்பாடு நேற்று நடந்தது. திருத்தணி, ம.பொ.சி., சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், பவுர்ணமி அடுத்த, நான்காவது நாளில் சங்கடஹர சதுர்த்தி விழா நடக்கிறது. அந்த வகையில், நேற்று மாலை, சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அருகம்புல் மாலை மற்றும் வண்ண மலர்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. அதே நேரத்தில், உற்சவர் சுந்தர விநாயகருக்கும் சிறப்பு தீபாராதனையும் காட்டப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் விநாயகர், சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாக உட்புறத்தில் மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திருத்தணி நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பஜார் பகுதியில் உள்ள, நாவல்லியம்மன் கோவில் வளாக விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்படடது. இதேபோல், அண்ணாதுரை சிலை அருகில் உள்ள செல்வ விநாயகர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீஸ்வரர் வரசித்தி விநாயகர், திருவள்ளூர் சாலை விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.