திருப்பரங்குன்றத்தில் சஷ்டி தேரோட்டம்!
ADDED :5133 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் சுப்ரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. காலை 8 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் தங்க மயில் வாகனத்தில் சட்டத்தேரில் எழுந்தருளினார். விரதம் மேற்கொண்ட பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுக்க ரத வீதி மற்றும் கிரிவலம் சென்று கோயில் முன் தேர் நிலை நிறுத்தப்பட்டது. ஆறு நாட்கள் கோயிலில் தங்கி விரதம் இருந்த பக்தர்கள் காப்புகளை கழற்றி விரதத்தை முடித்தனர். மாலை 4 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமி முன், 108 படி அரிசியினால் தயாரான தயிர்சாதம் படைக்கப்பட்டது. அதன்மேல் காய்கறிகள், பழங்கள், அப்பம், இளநீர், வடை, வெற்றிலை பாக்கு வைத்து பாவாடை நைவேன தரிசனம் நடந்தது. இரவு வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி அருள்பாலித்தார். நேற்றுடன் கந்த சஷ்டி விழா நிறைவுற்றது.