நாளை பிரம்மோற்சவம்: தயாராகாத ஸ்ரீபெரும்புதூர்
ADDED :3244 days ago
ஸ்ரீபெரும்புதுார்: ஆதிகேசவப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவம், நாளை துவங்கும் நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் அடிப்படை வசதிகள் முடிவு பெறாமல் அவசர கதியில் நடந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா ஏப்ரல் 22ம் தேதி துவங்கி, மே 1ம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக, ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா ஏப்ரல் 12ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெறுகிறது. நாளை பிரம்மோற்சவ விழா துவங்கும் நிலையில் ஸ்ரீபெரும்புதுார் பகுதி அதற்கு ஏற்றார் போல் தயாராகவில்லை. தற்போது, அவசர அவசரமாக அங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதால், மன வேதனை அடைந்துள்ளனர்.