உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமானுஜருக்கு 100 சவரனில் தங்க திருவாபரணம் தயார்

ராமானுஜருக்கு 100 சவரனில் தங்க திருவாபரணம் தயார்

சேலம்: ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் உள்ள, ராமானுஜருக்கு, 100 சவரன் தங்க திருவாபரணம் சேலத்தில் தயாரிக்கப்பட்டது. ராமானுஜரின், 1,000வது திருநட்சத்திரம் முன்னிட்டு, சென்னை, தாம்பரம் அழகிய மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபாவினர், 25 லட்ச ரூபாய் மதிப்பில், 100 சவரன் எடையில் தங்க திருவாபரணத்துக்கு, சேலத்திலுள்ள நகைகடையில் ஆர்டர் கொடுத்திருந்தனர். திருவாபரணம் தயாரிக்கும் பணி, ஆறு மாதங்களாக நடந்து வந்தது. அதன் பணி முடிவடைந்த நிலையில், நேற்று, சென்னை கைங்கர்ய சபா நிர்வாகிகளிடம், ஒப்படைக்கப்பட்டது. திருவாபரணத்தில் நான்கு டாலர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேற்புறமுள்ள டாலரில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உபயநாச்சியார் சமேத தேவபெருமாள் காட்சி அளிக்கிறார். வலதுபுறம், இரண்டாவது டாலரில் நம்மாழ்வார், இடதுபுறம், மூன்றாவது டாலரில், குமுதவல்லி நாச்சியார் திருமங்கை ஆழ்வார், கீழ்புறம் நான்காவது டாலரில், திருக்கச்சி நம்பி அருள்பாலிக்கின்றனர். அவை, நான்கிற்கும் நடுவே, பவள கல் இடம் பெற்றுள்ளது.அதன் கீழ், ராமானுஜர், திருக்கச்சி நம்பியிடம், தன் சந்தேகங்களை, பெருமாளிடம் கேட்டுச்சொல்லும்படி வினவிய சம்பவமும், அதற்கு பெருமாள் அளித்த பதில்களை விளக்கும் வகையில், பெருமாள், ராமானுஜருக்கு அருளிய, ஆறு வாசகங்களும் இடம்பெற்றுள்ளன. அடுத்து, ஒன்பது நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு, அவை, தங்கச் செயின்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. செயின்கள் அனைத்திலும், தங்கம் மீது வெள்ளை நிற கற்கள் இடம் பெற்றுள்ளன. திருவாபரணம், சேலத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன், நேற்று சென்னை எடுத்துச் செல்லப்பட்டது.நாளை மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீபெரும்புதுார், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் ராமானுஜருக்கு சாத்துபடிசெய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !