உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நயினார்கோவிலில் வைகாசி தேரோட்டம்

நயினார்கோவிலில் வைகாசி தேரோட்டம்

பரமக்குடி: பரமக்குடி அருகே நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்ஸவ விழாவில் நேற்று கயிலை வாத்தியம் முழங்க தேரோட்டம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் வைகாசி வசந்தோத்ஸவ விழா மே 29 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தீர்த்தம், தலம், மூர்த்தி ஆகிய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் தோஷ நிவர்த்திக்காக வருடம் முழுவதும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். இக்கோயில் விழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசியில் நடப்பது வழக்கம். இதன்படி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், தினமும் இரவு சுவாமி, அம்பாள் இந்திர விமானம், வெள்ளி நந்தீஸ்வரர், ஹம்ச, பூத, சிம்ம, யானை, வெள்ளி ரிஷபம், கைலாச, கிளி, சேஷ, காமதேனு வாகனங்களில் வீதியுலா வந்தனர். நேற்று காலை 8:30 மணிக்கு நாகநாதசுவாமி, சுவுந்தர்யநாயகி அம்மன் தனித்தனி தேரில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனை நிறைவடைந்து, கயிலை வாத்தியம் முழங்க, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். விநாயகர், முருகன் தேர் முன் செல்ல நான்கு மாட வீதிகளில் சுற்றி வந்த தேர் காலை 11:00 மணிக்கு நிலையை அடைந்தது. விழாவில் சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக பொறுப்பாளர் வைரவ சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !