கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பரவசம்
ADDED :3050 days ago
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெரு விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் கடந்த, 14ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகா சண்டியாகம், மறுகாப்பு கட்டுதல், மாவிளக்கு ஊர்வலம், அலகு குத்துதல், கம்பம் ஆற்றுக்கு செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கோவில் அருகில், நாட்டுப்புற பாடகர் நவநீதகிருஷ்ணன், விஜயலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது.