உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பு

மூன்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் காப்பு கட்டி தீமிதிப்பு

திருத்தணி: திரவுபதியம்மன் உட்பட மூன்று அம்மன் கோவில்களில், நேற்று நடந்த தீமிதி விழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. தினமும் காலை, 7:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:30 மணி வரை மகாபாரத சொற்பொழிவும், மாலையில் உற்சவர் அம்மன் வீதியுலாவும், இரவு, 10:00 மணிக்கு மகாபாரத நாடகமும் நடந்து வந்தது.

நேற்று, காலை, 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 900 பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து, அக்னி குண்டத்தில் இறங்கி தீமிதித்தனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, காலையில் தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. அதே போல், திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் அருந்ததி காலனி, சீனிவாசபுரம் அருந்ததி காலனி ஆகிய இடங்களில் உள்ள மாத்தம்மன் கோவிலில், நேற்று, தீமிதி திருவிழா நடந்தது. காலை, 9:00 மணிக்கு, கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீமிதித்தனர். பின், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !