சபரி மலை உழவார பணி: ஐயப்ப பக்தர்கள் புறப்பாடு
ADDED :3195 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் மற்றும் மாவட்ட அளவிலான ஐயப்ப பக்தர்கள், 300க்கும் மேற்பட்டோர் சபரிமலை சேவைக்கு சென்றனர். சபரிமலையில், ஒவ்வொரு முறையும் நடை திறந்து பூஜைகள் முடிந்து, கடைசி நாள் நடை அடைத்தவுடன், அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் சன்னிதானம், ஐயப்பன் பாதை, பம்பை ஆகிய இடங்கள் சுத்தம் செய்யும் பணி நடக்கும். ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதம் இந்த உழவார பணி செய்யும் வாய்ப்பு, நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்திற்கு வழங்கப்படுகிறது. தொடர்ந்து, சேவா சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், 300க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் மாலை புறப்பட்டனர். அவர்களை வழியனுப்பும் விழா, குமாரபாளையம், ஐயப்பன் கோவிலில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெகதீஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.