முத்துப்பல்லக்கில் சவுந்தரராஜப்பெருமாள் வீதியுலா
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இரவு நேரத்தில் முத்துப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தார். கடந்த ஜூலை 30ல் கொடியேற்றத்துடன் துவங்கிய 13 நாள் ஆடித்திருவிழா இன்றிரவுடன் நிறைவடைகிறது. தினமும் இரவு மண்டகபடிதாரர் சிறப்பு வழிபாடு, வாகனங்களில் சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் ஆக.,5, தேரோட்டம் ஆக.7ல் நடந்தது. திருவிழாவில் இரவு நேரத்தில் பெருமாள் பல்லக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் வசந்தம் முத்துப்பல்லக்கு நேற்றுமுன்தினம் இரவு நடந்தது. சன்னதியில் இருந்து முத்துப்பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் புறப்பட்ட பெருமாளை நான்கு ரத வீதிகளிலும் காத்திருந்த பக்தர்கள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டனர். அதிகாலை சுவாமி சன்னதி திரும்பினார். கோயில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன், பொதுமக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.