தொன்மை மிக்க கார்த்திகை விழாவில் அகல்விளக்கின் பெருமை
கார்த்திகை மாதத்தில் வீடுகளிலும், கோவில்களிலும் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். பல திருக்கோவில்களில் கார்த்திகை மாதத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. சிறப்பாக, நினைக்க முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் தீப வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை இங்கே, "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியாக வழிபடுகிறோம். அடி முடி காணா அண்ணலாக சிவபெருமான் காட்சி தரும் வடிவத்தை லிங்கோத்பவர் என அழைக்கிறோம். இத்திருக்கோவிலில் கருவறையின் பின்புறச் சுவரின் மாடத்தில் லிங்கோத்பவர் வடிவத்தை கண்டு வழிபடலாம்.
மனிதன் தொன்று தொட்டு அகல் விளக்கினை பயன்படுத்தி வந்துள்ளான். நாகரிகம் அடையாத காலத்தில் அகல் விளக்குகளை கைகளால் செய்து பயன்படுத்தி வந்ததை தொல்லியல் ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. பின்னர் சக்கரத்தின் உதவியால் அகல் விளக்குகள் உருவாக்கப்பட்டதையும் அறிய முடிகிறது. பழையாறை, பூம்புகார், கருவூர், மாங்குடி, செம்பியன் கண்டியூர் போன்ற பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் ஒரு முகமுடைய அதாவது ஒரு திரி போடக்கூடிய அகல் விளக்குகள் கிடைத்துள்ளன.
போளுவாம்பட்டி, திருக்கோவிலூர், திருவாமாத்தூர், பேரூர் போன்ற இடங்களில் நடைபெற்ற ஆய்வுகளில் பல திரிகள் போடக்கூடிய பல முனை அகல் விளக்குகளும் கிடைத்துள்ளன.
கார்த்திகை விளக்கீடு ஒரு தொன்மையான விழாவாக தமிழகத்தில் நடைபெற்று வந்துள்ளது. சங்க இலக்கியங்களான அகநானூறு, சிலம்பு, நெடுநல்வாடை, நற்றிணை போன்றவை அகல் விளக்குகளைப் பற்றி குறிப்பிடுகின்றன. கார்த்திகை நாளில் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. "நலம் மிகு கார்த்திகை நாட்டவரிட்ட என்று கார் நாற்பதும், "கார்த்திகைச் சாற்றில் கழி விளக்கு போன்றனவே என்று களவழி நாற்பதும், "குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன என்று சிந்தாமணியும் இந்நாளை பற்றி சிறப்பிக்கின்றன.
மயிலை திருக்கோவிலில் நடைபெற்ற கார்த்திகை நாள் விளக்கீடுவிழா சிறப்பு பற்றி ஞானசம்பந்தர் தமது பாடலில் குறிப்பிடுவதையும் காணலாம்.சிறிய அளவிலாலான பானைகளும், "அகல் என்றே அழைக்கப்பட்டது. கருவூரில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வின்போது கிடைத்த சிறிய பானை ஒன்றில், "குறு அகல் எனவும், கொடுமணல் என்ற இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த சிறிய பானை ஒன்றில், "களந்தை வம்பன் அகல் என்று பண்டைய தமிழ் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட சிறிய பானைகள் கிடைத்தன. இவை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.
திருக்கோவில்களில் விளக்குகளை ஏற்ற தானம் அளித்த செய்தியினை பெரும்பான்மையான கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இதில் பல்வேறு வகையான விளக்குகள், விளக்குகள் எரிய அளிக்கப்பெற்ற எண்ணெய், நெய், அதற்காக அளிக்கப்பட்ட பசுக்கள் அவை எவ்வாறு பராமரிக்கப்பட்டன போன்ற செய்திகளை கல்வெட்டுகள் கூறுகின்றன. குறிப்பாக, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா நடத்த தானம் அளித்த செய்தியினை திருவண்ணாமலை, திருப்பாற்றுறை, கருவூர், சுசீந்தரம் கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. "சொக்கப்பனை விழாவுக்கும் தானம் அளிக்கப்பட்டது என்பதையும் அறிய முடிகிறது.
கார்த்திகை தீப திருவிழா நாளில் களிமண்ணால் ஆன அகல் விளக்குகளை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். மற்ற விளக்குகளை விட களிமண்ணால் ஆன அகல் விளக்குகளில் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்தது எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அகல் விளக்குகளை செய்பவர்களை ஆதரிக்கும் நற்செயலாகவும் அமைகிறது. எனவே, கார்த்திகை தீப திருவிழாவில் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவோம்!