கந்தசாமி, கரபுரநாதர் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
ADDED :2926 days ago
உத்தமசோழபுரம்: கந்தசாமி, கரபுரநாதர் கோவில்களில், திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. சேலம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் கந்தசஷ்டி விழா, கடந்த, 24ல் காப்புக்கட்டு உற்சவத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று காலை, மரமாக நின்ற சூரனை இரண்டாக பிளந்து, சேவல் மற்றும் மயிலாக மாற்றி, சினம் தனிந்து மயில் வாகனத்தில், முருகன் எழுந்தருளினார். மாலை, வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில், அலங்கார சப்பரத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, ஊஞ்சல் பாலி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. அதேபோல், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், நேற்று மாலை, வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.