திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமிகோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடந்தது.கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டுள்ள ராகுபகவான் மங்களராகுவாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் நாகநாதசுவாமியை திருமால் பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன் முதலிய தேவர்களும், கௌதமர், பராசரர், மார்க்கண்டேயர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டு பேறு பெற்றனர். சிறப்புவாய்ந்த இத்தலத்தில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இவ்வாண்டும் கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.கடந்த 6ம் தேதி மாலை சுவாமி அம்பாள் தனித்தனி ஓலைச்சப்பரத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் வீதியுலா டைபெற்றது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சீர்வரிசை, ஊஞ்சல், மாலை மாற்றுதல் வைபவங்களுடன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.சுவாமி நாகநாதபெருமான், பிறையணியம்மன், கிரிகுஜாம்பிகை என்ற இருதேவியருக்கும் மாங்கல்யம் கட்டும் நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை தரிசனம் செய்தனர். தொடர்ந்து மஞ்சத்தில் புறப்பாடு நடந்தது. இன்று 10ம் தேதி காலை 6.30 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளலும், தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம்பிடித்தலும் நடக்கிறது. விழாவின் முக்கிய திருநாளான 10ம் நாள் காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களில் வீதியுலாவும், தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு சூரியபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில்ஆலய உதவி ஆணையர் மோகனசுந்தரம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.