மாரியம்மன் தேரோட்டம் கோலாகலம்
ADDED :2873 days ago
ஓமலூர்: மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஓமலூர், பல்பாக்கி, மகமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, தேரோட்டம் நடந்தது. முன்னதாக, அம்மன் குதிரை வாகனத்தில், முக்கிய வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, தேரில் அம்மன் எழுந்தருளினார். ஓமலூர் டி.எஸ்.பி., பாஸ்கரன், தேரை வடம்பிடித்து இழுத்து துவக்கி வைத்தார். பின், ஏராளமானோர் தேரை இழுத்து வந்தனர். அப்போது, பக்தர்கள், உப்பு பாக்கெட்டுகளை வீசியெறிந்து வழிபட்டனர். இதையொட்டி, மூலவர் அம்மன் சிலைக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. இன்றிரவு சத்தாபரணம், நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.