அங்காளம்மன் கோவில் குண்டம் விழா கோலாகலம்
ADDED :2935 days ago
பேரூர் : பேரூர் அங்காளம்மன் கோவிலில், குண்டம் இறங்கும் திருவிழா நேற்று நடந்தது. கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலாக அங்காளம்மன் கோவிலில், ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியை முன்னிட்டு குண்டம் இறங்கும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா, கடந்த, 11ம் தேதி துவங்கியது. 13ம் தேதி மஹா சிவராத்திரியை முன்னிட்டு அபிேஷக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் காலை, சக்தி அலகு தரிசனம், அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருதல் மற்றும் அக்னி குண்டம் வளர்த்தல் பூஜைகள் நடந்தன. நேற்று காலை, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் செய்யப்பட்டன; அங்காளம்மன் கரகம் எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து, சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் அம்மனை தரிசித்து குண்டம் இறங்கினர். மதியம், 12:00 மணிக்கு கொடியிறக்குதல், அக்னி அபிேஷகம் மற்றும் அன்னதானம் நடந்தன.