உலக நன்மைக்காக 48 நாட்கள் மவுன விரதம்: சென்னிமலையில் தொடங்கினார் சித்தர்
ADDED :2825 days ago
சென்னிமலை: சென்னிமலையில் உலக நன்மைக்காக, சித்தர் ஒருவர், 48 நாள் மவுன விரதம் தொடங்கியுள்ளார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை, சிவஞான சித்தர் பீடத்தை சேர்ந்தவர் சரவண சித்தர். கடந்த, 2014ல் மழை வேண்டி, சென்னிமலை அருகே, வாய்ப்பாடி கொமர மலை அடிவாரத்தில் குடில் அமைத்து, 48 நாட்கள் வருண யாகம் நடத்தினார். அப்போது மழை பெய்தது. தற்போது உலக நன்மைக்காக, நாடு நலம் பெற்று, செல்வ வளம் பெருக வேண்டும். நதிகள் இணைப்பு விரைவில் நடக்க வேண்டும். விவசாயம் செழிக்க, 48 நாட்கள் மவுன விரதத்தை, சித்தர்கள் உத்தரவுப்படி இருப்பதாக அறிவித்தார். சென்னிமலை அருகே, மணிமலை கருப்பணசாமி கோவிலில், 48 நாள் விரதத்தை நேற்று தொடங்கினார். இந்த நாட்களில், உணவு சாப்பிடாமல் நீராகாரங்களை மட்டும் உட்கொள்வார். ஏப்.,6ல் விரதத்தை நிறைவு செய்கிறார்.