உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்மா நகர் கோவில் தீ மிதி திருவிழா

பர்மா நகர் கோவில் தீ மிதி திருவிழா

எண்ணுார்: எண்ணுார், பர்மா நகர் கோவில் தீ மிதி திருவிழாவில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பர்மாவில் இருந்து, 1964ல், அதிகளவிலான தமிழர்கள் தாயகம் திரும்பினர். அதில், 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், எண்ணுார், பர்மா நகரில் வசிக்கின்றனர். பர்மாவில் இருந்து மண் எடுத்து வரப்பட்டு, அங்கிருப்பது போலவே இங்கும், ஸ்ரீ பீலிக்கான் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் கட்டி, வழிபட்டு வருகின்றனர். இந்த கோவிலின், 52ம் ஆண்டு தீ மிதி திருவிழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றைய தினமே, கோவில் வளாகத்தில், 1.36 கோடி ரூபாய் செலவில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட, 43 அடி உயர ஆஞ்சநேயர் சிலை, 45 அடி உயர அங்காள ஈஸ்வரி சிலைகளுக்கு, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, 10 நாட்களும், பர்மா நகரில் உள்ள, 11 தெருக்களிலும், அம்மன் வீதி உலா நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதி திருவிழா, நேற்று இரவு நடைபெற்றது. இதில், 10 நாட்களாக காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், பாரதியார் நகர் கடற்கரையில் நீராடி, பல வகைகளில் அலகுகள் குத்தியும், குண்டுவேல், இளநீர் அலகு, துாக்க நேர்ச்சை, தீச்சட்டி ஏந்தியும், முதுகில் அலகு குத்தி கார், ஆட்டோவையும் இழுத்தவாறு, கோவிலை நோக்கி அருளாடி வந்தனர். பின், கோவிலில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட அக்னி மேடையில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !