உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 45 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கோயில் விழா

45 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் கோயில் விழா

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மருநுாத்தில் 45 ஆண்டுகளுக்கு பின் முத்தாலம்மன் உட்பட பல்வேறு சுவாமிகளின் கோயில் விழா நடக்கிறது. கடந்த மே 15 முதல் சாட்டுதலுடன் விழா நடந்து வருகிறது. மறுநாள் ஏழு ஊற்று தோண்டி சின்னக்கருப்பு கோயிலுக்கு சுத்த தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. மே 25 ல் பாலமுருகன் கோயில் கொடியேற்றம், சின்னகருப்பு, சங்கிலி கருப்பு கோயில்களில் கிடா வெட்டு நடந்தது. மறுநாள் பட்டாணிக்கு கிடா கந்திரி கொடுத்தல் மற்றும் பாத்தியா ஓதுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. வருகிற மே 30 ல் முத்தாலம்மனுக்கு விழா எடுக்கப்பட்டு மறுநாள் கழுமர ஏற்றம் நடக்கிறது. ஜூன் 1 அன்று முருகன் கண் திறந்து மலை சென்ற பிறகு எருது ஓட்டம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை இஸ்லாமியர்கள் உட்பட மருநுாத்து, சாமிநாதபுரம், கண்ணமனுார், புதுஆவிளிபட்டி, அரண்மனையூர், கோட்டைப்பட்டி, ஆவிளிபட்டி, ஜோத்தாம்பட்டி, மணியகாரன்பட்டி மற்றும் பூவகிழவன்பட்டி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். 45 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் விழா நடப்பதால் இளைஞர்கள் உற்சாகத்துடன் கோயில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !