தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தன. தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமி நாளில், பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி, நேர்த்திக்கடன் செலுத்தி, கோவிலை, 18 முறை சுற்றி வலம் வந்து, காலபைரவரை தரிசனம் செய்வது வழக்கம்.
இம்மாத தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் நடந்தது. தொடர்ந்து, 64 வகையான அபி?ஷகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடந்தன. பின், மூலவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு காலை, 11:00 மணிக்கு மேல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். 12:00 மணிக்கு உற்சவ தட்சணகாசி காலபைரவர், கோவிலை சுற்றி மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாக பூஜை நடந்தது.