ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமை: மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :2930 days ago
கரூர்: ஆடி இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, கரூர் மாரியம்மன் கோவில்களில், அம்மனுக்கு வெள்ளி கொலுசு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் சிறப்பு பூஜைகள் நடந்தன. கரூர், பசுபதிபுரம் வேம்புமாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, 38 கிலோ வெள்ளி கொலுசுகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. அதேபோல், ஜவஹர் பஜார் மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. கோவில் முன் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தான்தோன்றிமலை, குடித்தெரு ஆதி மாரியம்மன் கோவிலில், அம்மனுக்கு ஆபரணங்களால் அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காந்திகிராமம் மாரியம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.