சேலத்தில் கோவிந்தா கோஷம் முழங்க பெண்கள் நடத்திய தேரோட்டம்
ADDED :2578 days ago
சேலம்: கோவிந்தா கோஷம் முழங்க, பெண்கள் மட்டும் வடம்பிடித்து தேரை இழுத்து வந்தனர். செவ்வாய்ப்பேட்டை, வெங்கடாசலபதி கோவிலில், 15ம் ஆண்டு பிரம்மோத்சவ விழா, கடந்த, 13ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவில், ஒரு சிறப்பு வாகனத்தில், சுவாமி வீதியுலா வந்தார். ஒன்பதாம் நாளான நேற்று 21ல்,, தேரோட்டம் நடந்தது.காலை, 4:00 மணிக்கு, மூலவருக்கு திருமஞ்சனம், உற்சவர் வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு, 10:00 மணிக்கு, தேரில் எழுந்தருளச் செய்தனர். பெண்கள் மட்டும், 27 அடி உயர தேரை, வடம் பிடித்து இழுத்துவந்தனர். ஏராளமான பக்தர்கள், கோவிந்தா கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர். நான்குமாட வீதிகளில் வலம் வந்த தேர், மதியம், 1:00 மணிக்கு, நிலையை அடைந்தது. மாலை தீர்த்தவாரி, இரவு, கண்ணாடி மாளிகை சேவை நடந்தது.