திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் பவுர்ணமி நிறைமணி விழா
திருவேற்காடு: புரட்டாசி மாத பவுர்ணமியையொட்டி, கருமாரியம்மன் கோவிலில், நிறைமணி விழா நடந்தது. சென்னை, திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் கோவிலில், புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நிறைமணி விழா பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அதில், கோவில் மூலஸ்தானத்தின் முன் பகுதியில், காய்கறி, தானியம், பழம், எண்ணெய், இனிப்பு, குளிர்பானங்கள் ஆகியவை, பைகளில் கட்டி, தோரணமாக தொங்கவிடப்பட்டு உள்ளன.
மனிதன் உட்பட அனைத்து ஜீவராசிகளும் பசியின்றி வாழ வேண்டும்; மழை, விவசாயம், இயற்கை வளம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இந்த நிறைமணி பூஜை நடத்தப்படுகிறது. மூன்றாவது நாளான நேற்று, அந்த பொருட்கள் மூலம், கூட்டாஞ்சோறு எனும் உணவு சமைத்து, அம்மனுக்கு படைத்து, பக்தர்களுக்கு அன்னதானமாகவும், பழம் மற்றும் இனிப்புகள், பிரசாதமாகவும் வழங்கப்பட்டன. சென்னை சுற்று வட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள், நிறைமணி விழா பூஜையில் பங்கேற்றனர்.