விருத்தகிரீஸ்வரர் மாசிமக தெப்பல் உற்சவம்: நீர் நிரப்பும் பணி தீவிரம்
விருத்தாசலம்: மாசிமக பிரம்மோற்சவத்தையொட்டி நடைபெறும் தெப்பல் உற்சவத்தை முன்னிட்டு, அம்மன் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி துவங்கியது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், வரும் 10ம் தேதி துவங்குகிறது. அதில், 11ம் நாள் உற்சவமான தெப்பல் உற்சவம், விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் வரும் 20ம் தேதி நடத்தப்படுகிறது. அன்று, பாலக்கரை இறக்கத்தில் உள்ள அம்மன் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட சண்முக சுப்ரமணியர் சுவாமி அருள்பாலிப்பது வழக்கம். ஆண்டுதோறும் தெப்பக்குளத்தில் மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மாசிமக பிரம்மோற்சவத்திற்கு மின் மோட்டார் மற்றும் மேல்நிலைத் தொட்டி மூலம் தண்ணீர் நிரப்பும் பணி நடந்து வருகிறது. ஆனால், குளத்தில் மண்டியுள்ள சம்பு உள்ளிட்ட புதர்கள் மற்றும் படர்ந்து கிடக்கும் பாசிகள் அகற்றப்படாதது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தெப்பக்குளத்தை சீரமைக்க நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.