மதுரை சித்திரைத் திருவிழா: கொடியை புதுகொடிமரத்தில் ஏற்ற திட்டம்!
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுவாமி சன்னதியில், ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய கொடிமரம் வைக்கப்படவுள்ளது. ஆகமவிதிப்படி உருவாக்கப்பட்டுள்ள இம்மரத்தில் சித்திரைத் திருவிழாவிற்கான கொடியை ஏற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இக்கோயிலில் திருவிழா துவங்கியதை அறிவிக்கும் விதமாக, சுவாமி சன்னதி எதிரேயுள்ள பழமையான கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. யார் காலத்தில் இம்மரம் செய்யப்பட்டது என்ற விபரம் இல்லை. பல நூற்றாண்டு பழமையான தேக்கு வகையைச் சேர்ந்த இந்த மரத்தில், ஆங்காங்கே பழுது ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்தாண்டு செங்கோட்டை வனப்பகுதியில் இருந்து 62 அடி உயரத்திற்கு புதிய தேக்கு மரம் வாங்கப்பட்டு, கோயிலின் வடக்காடி வீதியில் ஆகமவிதிப்படி, செதுக்கும் பணி துவங்கியது. தற்போது, இறுதிக்கட்ட பணிகள் நடக்கிறது. மொத்த மதிப்பு ரூ.15 லட்சம்.சித்திரை திருவிழாவிற்குள் இம்மரத்தில் கொடியேற்ற கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப உபயதாரர்கள் மூலம் செம்பு, பித்தளை தகடுகள் பதிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.