உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயாரின் உடல்நிலை சீர் பெற...

தாயாரின் உடல்நிலை சீர் பெற...

திருச்சி தாயுமானவர் மீது ஞான சம்பந்தர் பாடியது  இப்பதிகம்.
சுகப்பிரசவம், தாயாரின் உடல் நிலை சீராக, வீடு கட்டும் பணி எளிதாக அமைய  இதை படியுங்க.

நன்று உடையானைத் தீயது இலானை நரைவெள்ளேறு
ஒன்று உடையானை உமை ஒருபாகம் உடையானைச்
சென்ற அடையாத திரு உடையானைச் சிராப்பள்ளிக்
குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே.

கைம் மகவு ஏந்திக் கடுவனொடு ஊடிக் கழை பாய்வான்
செம்முக மந்தி கருவரை ஏறும் சிராப்பள்ளி
வெம்முக வேழத்து ஈர்உரி போர்த்த விகிர்தா நீ
பைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழி அன்றே.

மந்தம் முழவம் மழலை ததும்ப வரை நீழல்
செந்தண் புனமும் சுனையும் சூழ்ந்த சிராப்பள்ளிச்
சந்தம் மலர்கள் சடைமேல் உடையார் விடைஊரும்
எம்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே.

துறை மல்கு சாரல் சுனைமல்கு நீலத்து இடைவைகிச்
சிறை மல்கு வண்டும் தும்பியும் பாடும் சிராப்பள்ளிக்
கறை மல்கு கண்டன் கனல் எரி ஆடும் கடவுள்ளம்
பிறை மல்கு சென்னி உடையவன் எங்கள் பெருமானே.

கொலை வரையாத கொள்கையர் தங்கள் மதில் மூன்றும்
சிலைவரை ஆகச் சென்றன ரேனும் சிராப்பள்ளித்
தலைவரை நாளும் தலைவர் அல்லாமை உரைப்பீர்காள்
நிலவரை நீலம் உண்டதும் வெள்ளை நிறம் ஆமே!

வெய்ய தண்சாரல் விரி நிற வேங்கைத் தண்போது
செய்ய பொன் சேரும் சிராப்பள்ளி மேய செல்வனார்
தையல் ஓர் பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில்
ஐயமும் கொள்வர் ஆர் இவர் செய்கை அறிவாரே.

வேய் உயர் சாரல் கருவிரல் ஊகம் விளையாடும்
சேய் உயர் கோயில் சிராப்பள்ளி மேய செல்வனார்
பேய் உயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீ உகந்து ஆடல் திருக்குறிப்பு ஆயிற்று ஆகாதே.

மலைமல்கு தோளன் வலி கெட ஊன்றி மலரோன்தன்
தலை கலன் ஆகப் பலிதிரிந்து உண்பர் பழி ஓரார்
சொலவல வேதம் சொலவல கீதம் சொல்லுங்கால்
சில அல போலும் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே.

அரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்
கரப்பு உள்ளி நாடிக் கண்டிலரேனும் கல் சூழ்ந்த
சிராப்பள்ளி மேய வார்டைச் செல்வர் மனைதோறும்
இரப்பு உள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரோ?

நாணாது உடை நீத்தோர்களும் கஞ்சிநாள் காலை
ஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்கும் சொல்
பேணாது உறுசீர் பெறுதும் என்பீர் எம்பெருமானார்
சேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே!

தேன் நயம் பாடும் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல் சங்கு ஏறும் கழுமல ஊரில் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவை வல்லார்
வானசம்பந்தத் தவரொடும் மன்னி வாழ்வரே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !