பழநி உண்டியலில் ரூ.2.07 கோடி
ADDED :2566 days ago
பழநி: பங்குனி உத்திரவிழாவையொட்டி பழநி முருகன்கோயில் உண்டியலில் 20 நாட்களில் ரூ. 2 கோடியே 7 லட்சம் காணிக்கையாக கிடைத்துள்ளது.
பழநி முருகன்கோயிலில் கடந்த மார்ச் 15 முதல் 24 வரை பங்குனி உத்திரவிழா நடந்தது. இதனை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடிகளுடன் குவிந்தனர். 20 நாட்களில் நிரம்பிய உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, கார்த்திகை மண்டபத்தில் எண்ணும் பணி நடந்தது.
ரொக்கமாக ரூ. 2கோடியே 7 லட்சத்து 10ஆயிரத்து 60, தங்கம்- 804 கிராம், வெள்ளி- 10ஆயிரத்து 120 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்- 1,477 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொ)செந்தில்குமார், திண்டுக்கல் உதவிஆணையர் சிவலிங்கம், முதுநிலைக்கணக்காளர் மாணிக்கவேல், மேலாளர் உமா, அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறும்.